அடுத்த 3 நாட்களுக்கு ரொம்ப பிஸி... சசிகலா சூறாவளி சுற்றுப்பயணம்!
சசிகலா சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கழக பொது செயலாளரின் முகாம் அலுவலகத்திலிருந்து வெளியிடுவதாக சசிகலா முன்னர் வெளியிட்ட அறிக்கையில், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களை தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் புரட்சி பயணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, சசிகலா 5 ஆம் தேதி, 7 ஆம் தேதி, 8 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (5 ஆம் தேதி) சசிகலா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். பின்னர் திண்டிவனம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் வருகிற 7 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியிலும், 8 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும் சசிகலா சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.