1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor rajinikanth talk about vijay success

விஜய் மீது எனக்கென்ன பொறாமை?!.. எம்.ஜி.ஆரை தாண்டிவிட்டார்!.. ரஜினி ஓப்பன் பேட்டி...

rajini i vijay
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நடிகர் ரஜினி திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். மேலும், விஜய் முதல்வரானதற்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை.. விமான நிலையத்தில் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டதற்கும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார். இது எல்லாமே விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக விஜய் முதல்வராவதை தடுப்பதற்காக அதிமுக - திமுகவை இணைத்து ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு ரஜினிதான் ஆலோசனை சொன்னதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். குறிப்பாக ரஜினியை பிடிக்காதவர்களும், விஜய் ரசிகர்களும் இதை நம்பினார்கள்.

தற்போது செய்தியாளர்களிடம்  இதுபற்றி விளக்கமளித்த ரஜினி ‘நானும் முக ஸ்டாலினும் 40 வருட கால நண்பர்கள்.. அவர் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் நண்பர் என்கிற முறையில் அவரை நேரில் சந்தித்து பேசினேன். எந்த கட்சிகளையும் இணைத்து ஆட்சிக்கு வர நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. அப்படி ஒரு கீழ்த்தரமான செயலை செய்யும் நபர் இந்த ரஜினிகாந்த் கிடையாது..

அடுத்து ரஜினி விஜய்க்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என பலரும் கேட்கிறார்கள்.  4ம் தேதியே அவருக்கு நான் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன்.. அதன்பின் விமான நிலையத்திற்கு சென்றபோது செய்தியாளர்கள் இருந்திருந்தால் அவருக்கு வாழ்த்து கூறி பேசியிருப்பேன்.. ஆனால் இரண்டு முறையும் அங்கே யாரும் இல்லை.. விஜய் செய்தது மிகப்பெரிய சாதனை.. எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை எல்லாம் தாண்டியிருக்கிறார்.. இந்த சிறு வயதில் அவர் இவ்வளவு வெற்றி பெற்றதை நான் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்.

எனக்கும் விஜய்க்கும் இருப்பது ஒரு தலைமுறை இடைவெளி.. சிறுவயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன்.. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.. என்னோடு அவரையும், அவரோடு என்னையும் ஒப்பிடுவது இருவருக்குமே நல்லதல்ல. எனக்கு விஜய் மீது எந்த பொறாமையும் இல்லை.. ஒருவேளை கமல் முதல்வராக இருந்தால் பொறாமைப்பட்டு இருப்பேனோ என்னவோ!.. நான் இதுவரை  முதலமைச்சர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டது இல்லை.. கலைஞர் பதவியேற்ற பிறகு கூட அவர் என்னை பார்க்க அழைத்தார்.  அதனால் நான் நேரில் சென்றேன்’ என ரஜினி விளக்கமளித்திருக்கிறார்.