1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (22:12 IST)

கொரோனா வைரஸ்: ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் நடக்குமா?

கொரோனா வைரஸ்: ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் நடக்குமா?
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது சீனாவைவிட உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
 
மக்கள் அதிகமாக இருக்கும் பெருநகரங்களில் கொரோனா வைரஸ் விரைவில் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனாவைத் தடுக்க பெருநகரங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் இதுவரை அதை எவ்வாறு எதிர்கொண்டுள்ளனர் என்பது பற்றிய தொகுப்பு.
 
பொதுப் போக்குவரத்து
 
பொதுப் போக்குவரத்து முறை கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவான சூழல் ஆகும். பொதுவாக இருமல் மற்றும் தும்மல் மூலமாக கொரோனா வைரஸ் அதிகமாக பரவுகிறது.
 
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் வழக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாக சுவாசத் தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என காய்ச்சல் பற்றிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
 
இதனால் தென் கொரியா, இத்தாலி, இரான் போன்ற நாடுகளில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களை சுத்தம் செய்யும்படி அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
 
ஒலிம்பிக்ஸ் போட்டி
 
மக்கள் பெரிதும் கூடும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளின் வைரஸின் பரவல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் அங்கே ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.
 
சீனாவின் ஷாங்காயில் நடக்க இருந்த ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரிக்ஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.
 
ஆறு ஆசிய சாம்பியன் லீக் விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டன. ஐரோப்பாவில் இத்தாலி அணியின் ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
 
ஆனால் ஜூலை 24 அன்று தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டால் உலகளவிலான விளையாட்டு போட்டிகளில் பாதிப்பு ஏற்படும்.
 
 
இப்போதைக்கு நாடு நாடாக எடுத்து செல்லும் ஒலிம்பிக்ஸ் ஜோதியைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகமானால் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதற்கான சாத்தியதையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுக்கவில்லை.
 
விளையாட்டு போட்டிகள் மட்டும் இல்லாமல் மத நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
 
மெக்கா மற்றும் மெதினாவுக்கு வரயிருந்த வெளிநாட்டு புனித பயணிகளை நாட்டுக்கு வர வேண்டாம் என தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது சௌதி அரேபியா.
 
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
 
பெரும்பாலும், அரசாங்கங்கள் கொரோ னாவைரஸை கையாளுவது குறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்துகின்றன. ஜப்பான், தாய்லாந்து, இரான், இராக் போன்ற நாடுகளில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
 
 
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பள்ளிகளை மூடப்படவில்லை, ஆனால் இங்கிலாந்தில் உள்ள நான்கு பள்ளிகளில் சுத்தப்படுத்துவதற்காக அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரான், சீனா, ஹாங்காங், தென் கொரியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இத்தாலி ஆகிய இடங்களுக்கு சமீபத்தில் சென்று வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தாங்களும் வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
வணிக நடவடிக்கைகள்
 
உலகளவிலான சில முக்கிய தொழில்நுட்ப மையங்களின் வணிக நடவடிக்கைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
அவசரநிலை பிரகடனம் செய்த சான் டீகோ மற்றும் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் உள்ள அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுடன் கைக்குலுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
மார்ச் மாதம் நடக்கவிருந்த ஃபேஸ்புக்கின் வருடாந்திர சந்தைப்படுத்துதல் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடக்கவிருந்த இணையவழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்த மாநாட்டிலிருந்து முக்கிய ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்வாங்கினர்.
 
அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் பணியாளர்களை அவர்களுக்கு காய்ச்சலோ அல்லது மூச்சுத் திணறலோ இருந்தால் தொழில்நுட்ப சேவைகளை பயன்படுத்தி வேலை செய்வது மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்வதை பரிந்துரைக்கிறது.
 
பொதுமக்கள் விழிப்புணர்வு
 
பொதுமக்களுக்கு கொரோனாவை கட்டுபடுத்தும் கைக்கழுவதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே கொரோனாவை தடுக்கும் முக்கிய வழிமுறை என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
உலக சுகாதார நிறுவனம் கூறிய அறிவுரைப்படி,
 
கைகளை நன்கு கழுவுவது
 
தும்மும்போது இருமும்போது தங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வது
மூச்சு பிரச்சனை இருப்பவர்களுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் இருப்பது
விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாமல் இருப்பது
போன்றவை கொரோனாவிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாகும்.
 
மருந்து கண்டுபிடிக்கவில்லை
 
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மருத்துவமனைகள் அதன் தீவிரத்தை குறைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளன.
 
பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தவும் அவர்களை கவனித்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
ஒரு வேளை நோயாளிகள் அதிகமானால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிசிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதனால் உடனடி சிகிச்சையில் தாமதம் ஏற்படக் கூடாது எனவும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
ஏற்கனவே மருத்துவ பணியாளர்களின் வேலை அதிகமாகியுள்ளபோது இன்னும் நோயால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதை எவ்வாறு கையாளுவார்கள் என ஒரு கவலை இருக்கிறது.
 
தனிமைப்படுத்த நடவடிக்கைகள்
 
பிரிட்டனில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
சீனாவில் பெரிதும் பாதிக்கப்பட்ட வுஹான் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வடக்கு இத்தாலியிலும் சில நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஆனால், கொரோனா வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அவ்வளவு சிறப்பானதல்ல என்கின்றனர் வல்லுநர்கள்.
 
சீனாவைப் போல நகரங்களை முழுவதுமாக முடக்க செய்தால் அது பலனளிக்கலாம் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் டாம் இங்லெஸ்பி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அவ்வாறு செய்தால் மக்களை அவர்களின் குடும்பத்தை விட்டு தள்ளி வைப்பதுடன் அவர்களுக்கான மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவை பாதிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
சீனாவில் நடப்பதுபோல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது கூட தடுக்கப்படலாம் என்கிறார் டாம்.