விஐபி வருகைக்காக சைக்கிளில் சென்றவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..
மும்பையில் விஐபி வாகன அணிவகுப்புக்காக சாலையை காலி செய்ய முயன்றபோது, போக்குவரத்து காவலர் ஒருவர் சைக்கிளில் சென்ற நபரை கீழே தள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் போக்குவரத்து பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிந்தூர் பாலம் அருகே உள்ள சந்திப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னால் அதிக எடையுடன் பொருட்களை ஏற்றி சென்ற சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது விஐபி வாகனங்கள் செல்வதற்காக தடுப்புகள் அகற்றப்பட்டு கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்த முயன்ற காவலர், அதன் முன்பக்கத்தை தூக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பின்புறத்தில் இருந்த அதிக எடை காரணமாக சைக்கிள் நிலைதடுமாறி, அந்த நபர் கீழே விழுந்தார்.
சம்பவத்துக்கு பிறகு காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் விவாதம் அதோடு நிற்கவில்லை. “பொது சாலை அனைவருக்கும் சொந்தமானது. விஐபி என்பதற்காக மற்றொரு நபரின் மரியாதையையும் உரிமையையும் பறிக்கலாமா?” என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.
குறிப்பாக இளம் தலைமுறையினர், விஐபி கலாசாரத்தை விமர்சித்துள்ளனர். சாலை வரி செலுத்தும் சாதாரண மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்றும், அதிகாரம் அல்லது செல்வாக்கு இருப்பதால் மட்டும் சாலையில் முன்னுரிமை கிடைக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு காவலரை பணியிலிருந்து நீக்குவது சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சூழல்கள் மீண்டும் உருவாகாமல் இருக்க, பொதுச் சாலைகளில் சாதாரண மக்களின் உரிமையும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
Edited by Siva
