1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vaiko condolences against central government nationalized ration scheme

வெளி மாநிலத்தவருக்கு தமிழகத்தில் ரேசன்: அப்போ தமிழர்களுக்கு?? – வைகோ கண்டனம்

Tamilnadu News
“ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை ஆளும் கட்சியான அதிமுக ஏற்க கூடாது என மதிமுக தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டுமென மத்தியில் பாஜக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தற்போது மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைகளுக்கு மாதாந்திர ரேஷன் வழங்கும் முறைய தேசிய அளவில் விரிவுப்படுத்த “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே 14 மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைய ஆயத்தமாக உள்ள நிலையில் தமிழக உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்த அவர் தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ் “பொதுப் பகிர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களும் அங்காடிகளில் ரேஷன் வாங்க புதிய நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்சொன்ன வார்த்தைகளை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வைகோ ”பெயரளவுக்கு கூட இந்த திட்டத்தை எதிர்க்காமல் செயல்படுத்த முயல்வது பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் தமிழக அரசு செயல்படுவதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்து வரும் பொதுப் பகிர்மானத்தை குலைக்கவும், வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களை ஊக்குவித்து அவர்களை தமிழகத்திற்கு புலம்பெயர செய்யவும் தான் மத்திய அரசு இப்படியான திட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
80,000 ஊழியர்களை பெட்டி கட்டி வீட்டிற்கு அனுப்பும் பிஎஸ்என்எல்!!