அவதூறுகளுக்கு இடம் தரும் வகையில் பேசக்கூடாது.. கட்சியினருக்கு திருமாவளவன் கோரிக்கை..!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டணி விவகாரங்களில் தனிநபர்கள் மீதோ அல்லது மற்ற கட்சிகள் மீதோ எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் தமக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, எந்தவொரு சாதிக்கோ அல்லது மதத்திற்கோ எதிராக விசிக இதுவரை சிந்தித்ததும் இல்லை, இனி செயல்பட போவதுமில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சமூக மக்களுக்கு எதிராக விசிக முடிவெடுப்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை சூழும் சனாதன பாசிச சக்திகளை வீழ்த்துவதே நமது முதன்மை இலக்கு என்றார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினின் முயற்சிகளுக்கு தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், பிரிவினைவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம் கொடுக்கும் வகையில் விசிகவினரின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கண்ணியமான முறையில் அரசியல் களத்தில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Edited by Siva