ஓட்டு போட்டது யாருக்கு?.. ஓட்டு மெஷினில் வாசனை திராவியம்!. தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை...
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதியான நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த முறை 5.73 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 75, 064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.234 தொகுதிகளிலும் சேர்த்து 4023 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.. நேற்றுதான் பிரச்சாரம் முடிவடைந்தது. தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்கள். வழக்கம்போல் முதல்முறை வாக்காளர்களும் நாளை தேர்தலில் வாக்களிக்கவிருக்கிறார்கள்..
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பொத்தான்களில் வாசனை திரவங்களை பூசி யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் சில அரசியல் கட்சியினர் இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது வாக்கு ரகசியத்தை பாதிக்கும் செயல் என்பதால் எந்திரங்களை தீவிரமாக பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொத்தான்களின் மீது வாசனை திரவியம் தடவப்பட்டிருந்தால் அது எந்திரத்தை சிதைக்கும் செயலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் மறுவாக்கு பதிவு நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது
கடந்த பல தேர்தல்களாகவே வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதை பல அரசியல் கட்சிகளும் செய்து வருகிறார்கள். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டால் என்ன செய்து என்பதற்காக வாக்கு எந்திரத்தில் உள்ள பொத்தான்களில் வாசனை திரவியத்தை தடவி அதன் மூலம் தங்களுக்குதான் வாக்களித்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் முயற்சியில் சிலர் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.