1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (17:30 IST)

ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்- சசிகலா

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேட்டி, சேலை மற்றும் ரொக்கத்தொகை குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாமல் இருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, காலதாமதமின்றி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக நம் கரும்பு விவசாயிகள் பெரும் அளவில் பயனடைந்தனர்.

ஆனால், திமுக தலைமையிலான அரசு போக்குவரத்து செலவினம் மற்றும் வெட்டுக்கூலி உட்பட ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் என தற்போது அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக தலைமையிலான அரசு கரும்பு கொள்முதலை இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் செய்யாமல், விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எந்தவித குளறுபடிகளும் செய்யாத வகையில் நேரடியாகக் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஒரு கரும்புக்கு 40 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்தால்தான் எங்களால் சமாளிக்கமுடியும் என தமிழக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளே, அரசு அறிவித்த விலையான 33 ரூபாயை தராமல், ஒரு கரும்புக்கு 15 ரூபாய் முதல் 17 ரூபாய் தான் கொடுத்ததாகவும், அதிலும் வெட்டுக்கூலி, ஏத்துக்கூலி போக வெறும் 10 ரூபாய்தான் தங்கள் கைக்கு கிடைத்ததாகவும் விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்பட்டனர்.  

எனவே, இது போன்ற தில்லுமுல்லுகளுக்கு இடமளித்திடாமல், திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு சேரவேண்டிய கரும்புக்கான கொள்முதல் விலை முழுவதுமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகள் இடுபொருள் விலை உயர்வு, விவசாய கூலி உயர்வு , காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் டீசல் இன்ஜின்களை கொண்டு 10 மாதங்கள் சாகுபடி செய்தது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் செங்கரும்பை விளைவித்து இருக்கின்றனர். எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புக்கு 40 ரூபாயாவது கிடைத்தால்தான் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதை திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் பொங்கல் பண்டிகையின்போது தவறாமல் வழங்கிக்கொண்டிருந்த விலையில்லா வேட்டி, சேலையை இந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு தருவார்களா? எனபதே கேள்விக்குறியாக இருக்கிறது.

கடந்த ஆண்டும் பொங்கல் பரிசுதொகுப்போடு வேட்டி, சேலை சேர்த்து வழங்கபடவில்லை. தமிழக நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொங்கல் தொகுப்போடு வேட்டி, சேலையும் சேர்த்து கொடுத்தால்தான் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாக அமையும் என்பதை திமுக தலைமையிலான அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் ஏற்கனவே புயல், மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்.

எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, கரும்பு விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 40 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்திடும் வகையில், காலதாமதமின்றி, எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் கரும்பு கொள்முதலை உடனே தொடங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.