விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக போராடிய மக்களை முந்தைய அரசு மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டதாகவும் அவர் விமர்சித்தார்.
2021-ம் ஆண்டு மே முதல் 2026-ம் ஆண்டு வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். அந்த வழக்குகளில் பல இன்னும் நிலுவையில் இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் மாநிலத்தின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட விஜய், SIPCOT தொழில் திட்டங்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல், ஜனநாயக முறையில் போராடிய ஆசிரியர்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு துணை நிற்கும்” என்று கூறிய விஜய், வழக்குகளை திரும்பப் பெறுவதன் மூலம் ஜனநாயக உரிமைகள் மேலும் வலுப்பெறும் என்றும், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva
