‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆர் சி பி அணியின் முன்னாள் வீரரும், கோலியின் நெருங்கிய நண்பருமான ஏ பி டிவில்லியர்ஸ் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒருமுறை “ஈ சாலா கப் நம்தே” என்று சொன்னதற்குக் கோலியிடம் இருந்து ஒரு மெஸேஜ் வந்தது. அவர் தயவுசெய்து அப்படி சொல்வதை நிறுத்துங்கள் என்று அனுப்பியிருந்தார்.” எனக் கூறியுள்ளார். ஆர்சிபி வீரர்கள் சொன்ன இந்த வாசகம் அந்த அணிக் கோப்பையே வெல்லாததால் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேலி வாசகமாகவே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.