வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (20:24 IST)

தவறான கொலை குற்றச்சாட்டு: 38 ஆண்டு சிறையில் கழித்தவருக்கு 150 கோடி நிவாரணம்

தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளாக சிறையில் கழித்தவர் நிரபராதி என்று தெரிய வந்ததால், அவரை விடுதலை செய்ததுடன், 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 150 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்துள்ளது.
தற்போது 71 வயதாகும் கிரேக் கோலே என்னும் அந்த நபர் தனது முன்னாள் தோழி மற்றும் அவரது மகனை கொலை செய்ததாக கூறி கடந்த 1978ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என்பதை கிரேக் தொடர்ந்து உணர்த்தி வந்ததால், அவரது வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அவரது டிஎன்ஏ மாதிரியின் மூலம் இந்த கொலை சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
 
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இத்தனை நீண்ட காலத்திற்கு பிறகு, ஒருவர் விடுவிக்கப்படுவது கலிஃபோர்னியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்குமென்று கருதப்படுகிறது.
 
இந்நிலையில், நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்றமுடியாவிட்டாலும், அவருக்கு நிவாரண தொகையை அளிப்பதன் மூலம் இந்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.