வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (23:22 IST)

'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம்

கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது.
 
ஜனவரி 20ஆம் தேதி காலை கூகுள் மற்றும் ஆல்ஃப்பெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்த இமெயிலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. 
 
இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6% ஆகும்.
 
சுந்தர் பிச்சை அனுப்பிய இமெயில், "நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.
 
இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம். மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்," என அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தார்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மெயிலில் தெரிவித்து இருந்தார்.
 
பொருளாதார வலிமை மிக்க நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார்.
 
அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, 2022ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கடினமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.
 
இதையொட்டி நிதி நிலைமையை சீராக்க, உலகின் முன்னணி டெக் நிறுவனங்களாக மெட்டா, அமெசான், டிவிட்டர் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்தன.
 
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13% ஆகும். இந்த எண்ணிக்கை 87 ஆயிரம் வரை அடுத்து வரும் நாட்களில் உயரும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார்.
 
அமெசான் நிறுவனமும் செலவுகளை குறைக்க இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
S
சர்வதேச நிறுவனங்களை போலவே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனக்களும் பலரை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியுள்ளன.
 
அண்மையில் இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார் அப் நிறுவனமான ஷேர் சாட்(Sharechat), தனது ஊழியர்களில் 600 பேர் வரை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
 
இந்த வேலை நீக்கத்தால் ஷேர் சாட் நிறுவனத்தின் 20% பேர் வேலையை இழந்தனர்.
 
இதே போல மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான கோ மெக்கானிக்(GoMechanic), தனது ஊழியர்களில் 70% பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
 
இது குறித்து லிங்க்ட்இன்(LinkedIn) சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்த அந்நிறுவனத்தில் முதன்மை அதிகாரி, "தவறான நிதி தணிக்கையின் காரணமாக வளர்ச்சிக்கான குறியீடுகளை அதிகரித்து காட்டப்பட்டது. இதனை அறிந்து கொண்ட முதலீட்டு நிறுவனம், தனது முதலீடுகளை திரும்பப்பெற்று விட்டது. இதன் விளைவாக எங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்," எனக் குறிப்பிட்டு இருந்தார்.
 
பிரபல இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தனது ஊழியர்களில் 380 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், அந்நிறுவனம் மோசமான கணிப்புகள் மூலமாக தேவைக்கு அதிகமான நபர்களை பணியில் அமர்த்தியது. இன்றைய சூழலை கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 
 
மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதன் மொத்த பணியாளர்களில், 5% ஊழியர்களை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்க இருக்கிறது.
 
இதன் மூலம் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கக்கூடும். இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெல்லா, கூடுதல் கவனத்துடன் இருக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடக்கிறது என்று தனது பணியாளர்களிடன் தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூகுள் தேடுபொறிக்கு(Google Search Engine) போட்டியாக, சாட் ஜிபிடி(Chat GPT) என்ற தேடுபொறியை உருவாக்கி இருக்கிறது. இந்த தேடு பொறி, செயற்கை நுண்ணறிவுன் உதவியுடன் சிறப்பாக செயல்படுவதால், இதன் வளர்ச்சிக்காக இந்த நிறுவனம் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
 
வேலைநீக்கத்தின் மூலமாக ஊழியர்களுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
கூகுள் நிறுவனமும் வேலை இழப்பால் பாதிக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு சில பொருளாதார இழப்பீடுகளை அறிவித்துள்ளது
 
 
அமெரிக்காவுக்கு வெளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளூர் விதிமுறைகளை பின்பற்றி இழப்பீடு வழங்கப்படும்.
தொழில்நுட்பம் குறித்த அமெரிக்க இணையதளமான Layoffs.fyi, தனது தளத்தில் 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையை சேர்க்கும் போது இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும்.
 
எப்போது சந்தை மீளும்?
இது குறித்து பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசும் போது, "நாம் ஒரு மந்தநிலையைக் காணப் போகிறோம். இதன் காரணமாக ஏற்பட இருக்கும் விளைவுகளினால், 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் வரை சந்தைகள் மந்தநிலையில் இருக்கும்," என அவர் தெரிவித்தார்.