1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:19 IST)

காஃபி போடுவது முதல் வானிலை அறிக்கை வரை - உதவும் டிஜிட்டல் பணியாளர்

உங்கள் வீட்டிலுள்ள தொலைக்காட்சியை இயக்கவும், உங்களுக்கு காஃபி போடவும், நீங்கள் வெளியே கிளம்பும் முன்பு சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலாக உள்ளதா என்பதை அறியவும் உங்கள் வீட்டில் ஒரு உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? அந்த உதவியாளர் ஒரு மனிதராக இல்லாமல், ஓர் எந்திரமாக இருந்தால் எப்படி இருக்கும்?

 
'டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்' என்று கூறப்படும் எந்திர உதவியாளர்கள் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே போகிறது. அமேசான் நிறுவனம் முதல் முறையாக இத்தகைய கருவியை 'அலெக்ஸ்சா' என்ற தொழில்நுட்பம் மூலம், 'எகோ' மற்றும் 'டாட்' ஒலிபெருக்கி வடிவில் அறிமுகம் செய்தது.
 
வானிலை நிலவரம், செய்தி, சமையல் குறிப்புகள் என அனைத்தையும் அலெக்ஸ்சா உங்களுக்கு சொல்லும். சமீபத்தில் அக்செஞ்சர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரேசில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைவிட இந்தியர்களுக்கு 'டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்' கருவிகளில் அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தது.
 
இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணையப் பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் 2018 இறுதிக்குள் குரல் மூலம் இயக்கக்கூடிய கருவிகளை வைத்திருப்பார்கள்.
 
39% இந்திய இணையப் பயனாளிகள் அத்தகைய கருவியை இந்த ஆண்டு வாங்குவோம் என்று கூறுகின்றனர். அமெரிக்காவில் 2017இல் மட்டும் 4.5 கோடி குரல் மூலம் இயங்கும் கருவிகள் விற்றுள்ளன.
 
அமேசான் டிஜிட்டல் வேலையாளாக இருக்கும் கருவியை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. கூகுள் இன்று முதல் அத்தகைய தனது 'கூகுள் ஹோம்' (Google Home) கருவியை இந்தியச் சந்தைகளில் வெளியிடுகிறது.
 
அமேசான் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களின் கருவிகளும் உங்கள் வீட்டின் வை-பை மூலம் இயங்கும் ஒலிபெருக்கிகளாக உள்ளன.
 
அமேசான் தனது டிஜிட்டல் பணியாளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தபோது 'இந்திய ஆங்கிலத்தையும்' புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கி இருந்தது.
 
கூகுளின் புதிய கருவி கூடுதலாக இந்தி மொழியையும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். மேற்கொண்டு பல இந்திய மொழிகளை சேர்ப்பதன்மூலம் இன்னும் இந்தியைச் சந்தையை அதிக அளவில் விரிவடையலாம் என்று இரு நிறுவனங்களும் கருதுகின்றன.
 
இப்போது ஒலிபெருக்கிகளில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் இருந்தாலும், வருங்காலங்களில் தொலைக்காட்சி, வானொலி, குக்கர், குளிர்சாதனப் பெட்டி, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய அனைத்திலும் குரலை கொண்டு மனிதர்களின் கட்டளையை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வசதி வரும்.