அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..
அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரத்தில் ஊழலையும் முறைகேடுகளையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அதிரடியான புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இனிமேல், அரசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு முதலமைச்சரின் நேரடி ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரியின் முந்தைய 5 ஆண்டு கால பணிப்பதிவுகள் மற்றும் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனைகள் ஆகியவை மிகத் தீவிரமாகவும் முழுமையாகவும் சரிபார்க்கப்படும்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் விதிகளின்படி மீறல்கள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளவர்கள் அல்லது தற்காலிக பணிநீக்கத்தில் இருப்பவர்களின் பெயர்கள் தகுதி பட்டியலில் சேர்க்கப்படுவது உடனடியாக தள்ளிவைக்கப்படும்.
தகுதி மற்றும் நேர்மைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்ற வகையில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த அதிரடி உத்தரவு அமைந்துள்ளது. லஞ்சமற்ற, வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்குவதே லட்சியம் என்று தவெக அரசு காட்டிவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு இது மேலும் வலு சேர்த்துள்ளது.
திறம்படப் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு, தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அதிரடி அறிவிப்புக்குத் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Edited by Siva
