1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Court orders ADMK to answer

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-வுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல்
திமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவில், சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும்,கொரோனா விதிகளை அமல்படுத்தவும் வலியுறுத்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், மத்திய காவல் படையை பணியமர்த்த வேண்டும், தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பதில் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அரசு வழக்குரைஞர் முத்துக்குமார் ஆஜராகி, 14900 வாக்குச்சாவடிகளுக்கும் போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நியாமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.
About Writer
Sugapriya Prakash