1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Baby elephant with trunk cut off - what happened?

தும்பிக்கை வெட்டப்பட்ட குட்டி யானை இறந்தது - என்ன நடந்தது?

இந்தோனீசீயா
இந்தோனீசீயாவில் வேட்டைக்காரர்கள் உருவாக்கிய யானை குழியில் சிக்கிய குட்டி சுமத்ரா யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த ஒரு வயதான அந்த குட்டி யானையை அதனுடன் வந்த யானைக்கூட்டம் அப்படியே விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
அச்சே ஜேயா கிராம மக்களால் இந்த குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூர் யனை பாதுகாப்பு அமைப்பின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
காயங்களுடன் இருந்த அந்த குட்டியை காப்பாற்ற, அதன் தும்பிக்கையில் பாதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும், காயங்களின் தொற்று உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் அது இரண்டு நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
"காயம் கடுமையாக இருந்ததால் எங்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை" என்று அச்சே ஜேயா இயற்கை வளங்கள் பாதுகாப்பு முகமையின் தலைவர் அகஸ் அரியான்டோ தெரிவித்தார்.
 
"நாங்கள் அதற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்தோம்," என்றும் அவர் கூறினார்.
 
யானைகளின் இயற்கையான வாழ்விடங்களான போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் விகிதம் காரணமாக, அவற்றில் வாழ்ந்து வந்த சுமத்ரா யானைகள், மிகவும் அழிவை சந்திக்கும் உயிரினமாகக் கருதப்பட்டு வருகின்றன.
 
இங்கு ஆண் யானைகளையே வேட்டைக்காரர்கள் குறிப்பாக இலக்கு வைக்கிறார்கள். இந்த வகை யானைகளின் தந்தங்கள் விலை மதிப்பானவை என்பதே அதற்குக் காரணம். இந்த தந்தங்கள் சட்டவிரோத தந்த சந்தையில் விற்கப்படுகின்றன.
 
வேட்டைக்கு இலக்காகும் யானைகளின் தொடர்ச்சியான மரணங்களின் வரிசையில் மிகச் சமீபத்திய மரணமாக இந்த குட்டி யானையின் இறப்பு கருதப்படுகிறது. இதற்கு முன்பு இந்த ஆண்டு ஜூலை மாதம், பெரிய யானை தலை துண்டிக்கப்பட்டு அதன் தந்தங்கள் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
About Writer
Sasikala