காங்கிரஸ் ஒன்றும் தவெகவுக்கு அடிமை இல்லை: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் பாதிக்கப்படும் என்றும், இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். எனவே, கர்நாடக அரசுக்கு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
புதுச்சேரி பட்ஜெட் மற்றும் ஆளுநர் உரையையும் நாராயணசாமி விமர்சித்தார். விமான நிலைய விரிவாக்கம், சாலைகள் மேம்பாடு, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி உண்மையில் வந்துள்ளதா, திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக கூறினார்.
முதல்வர் ரங்கசாமியின் பட்ஜெட்டில் சிலிண்டர் மானியம் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்வு போன்றவற்றைத் தவிர பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசு நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் பெரும் தொகையை திருப்பி அனுப்பியிருப்பது நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வரும் அமைச்சர்களும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றார். ஆளுநர் நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.
தமிழக அரசியல் குறித்தும் பேசிய அவர், 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியே பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாடு இந்தியா கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், அது அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
Edited by Siva
