கணவர், மனைவி இருவரும் வேலை பார்க்கும் முறைக்கு ஆப்பு வைக்கும் டிரம்ப்.. இந்தியர்களுக்கு பாதிப்பா?
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், H-1B விசா வைத்திருப்பவர்களின் துணைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் H-4 EAD வேலை அனுமதியை ரத்து செய்யும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான H-4 விசா வைத்திருப்பவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகலாம்.
H-4 விசா என்பது H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவில் வசிப்பதற்காக வழங்கப்படுவது. அதில் வேலை செய்ய தனியாக Employment Authorisation Document எனப்படும் EAD அனுமதி தேவைப்படுகிறது. தற்போது அந்த EAD-ஐ தகுதியான சில H-4 துணைவர்கள் பெற முடிகிறது. குறிப்பாக இந்தியர்களே இதன் மூலம் அதிகம் பயனடைந்துள்ளனர். 2014 முதல் 2017 வரையிலான தரவுகளின்படி, H-4 EAD அனுமதிகளில் சுமார் 93 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவர்களில் 94 சதவீதம் பெண்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த திட்டம் இன்னும் இறுதி முடிவாகவில்லை. முதலில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வ முன்மொழிவை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளை பெற வேண்டும். அதன்பிறகே இறுதி விதிமுறை அமலுக்கு வர முடியும். எனவே தற்போது செல்லுபடியாகும் EAD வைத்திருப்பவர்கள் உடனடியாக வேலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
இதற்கு முன்பும் 2017-ல் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அது இறுதி செய்யப்படாமல் 2021-ல் திரும்பப் பெறப்பட்டது. தற்போது H-1B விசா கட்டணம் உள்ளிட்ட பல்வேறு குடியேற்ற விதிமுறை மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், H-4 EAD திட்டமும் இந்திய குடும்பங்களுக்கு முக்கிய கவலையாக மாறியுள்ளது.
Edited by Siva
