நேபாள பேரிடர்.. டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 இந்தியர்கள்...!
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளம் பல பகுதிகளை நிலைகுலைய செய்துள்ளது. திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதி வழியாக மத்திய பகுதிகளுக்குள் புகுந்தது. சகதி, பாறைகள் மற்றும் பெருக்கெடுத்த நீருடன் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேரழிவில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 5 பேர், ஒரு சிறிய தேநீர் இடைவேளையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர் ஆகஸ்ட் 22-ம் தேதி நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர்.
பயணத்தின் 5-வது நாளான ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 10 மணியளவில் தாடிங் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். அப்போது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. மக்கள் அலறியடித்து ஓடுவதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சில நிமிடங்கள் முன்னதாகவே அங்கிருந்து கிளம்பியிருந்தால் தாங்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் தங்கள் வாகனத்திலேயே தங்கியிருந்த அவர்கள், வெள்ளத்தின் பாதிப்புகளை நேரில் பார்த்தனர். பின்னர் மீட்கப்பட்ட 5 பேரும் ஆகஸ்ட் 29-ம் தேதி பாதுகாப்பாக ராய்ப்பூர் திரும்பினர். ஒரு சாதாரண தேநீர் இடைவேளை, அவர்களின் வாழ்க்கையையே மாற்றிய தருணமாக அமைந்துள்ளது.
Edited by Siva
