1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2020 (13:03 IST)

சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி; கடத்தி சென்ற கும்பல்! – சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடையை மர்ம கும்பல் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த செல்வன் என்ற இளைஞரும், குருப்பநாய்க்கம்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணும், ஒருவரையொருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோரை விடுத்து திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர். காவலாண்டியூரில் திராவிடர் கழகத்தினர் முன்னிலையில் இவர்களது திருமணம் சுயமரியாதை திருமணமாக நடத்தப்பட்டுள்ளது.

அப்போது திடீரென அங்கு வந்த 40க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி தி.க பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடிகளை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக கடத்தல்க்காரர்களை விரட்டி பிடித்து ஈஸ்வரனையும், செல்வனையும் மீட்டுள்ளனர். இளமதியை கடத்தி சென்றவர்களிடமிருந்து அந்த பெண்ணை மீட்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

காதல் ஜோடிகள் திருமணத்தின் போது கடத்தப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.