1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (09:11 IST)

தேமுதிக கொஞ்சம் வெயிட் பண்ணனும்! – அமைச்சர் ஜெயக்குமார்

மாநிலங்களைவை எம்.பி பதவிகளுக்கு தேமுதிகவுக்கு சீட் கொடுக்காத விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சியிலிருந்து யாரும் இல்லாமல் மூவரும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் இருவருக்கும், கூட்டணி கட்சியான தமாகாவில் ஜி.கே.வாசனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாளாக எம்.பி சீட் கேட்டு வந்த தேமுதிகவுக்கு சீட் கொடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சீட் ஒதுக்கீடு குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ”தமாகாவிற்கு எம்.பி சீட் ஒதுக்கியது ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவு. அதிமுக ஒரு ஆலமரம். அது அனைவருக்கும் நிழல் தரும். எல்லாருக்குமே வாய்ப்புகள் கிடைக்கும். அதிமுக – தேமுதிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சுமுகமாகவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.