1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (08:18 IST)

வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்: ஜெகன்மோகன் ரெட்டியின் முதல் முயற்சி

ரேசன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி வரும் என ஏற்கனவே தமிழகத்தில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடித்து தங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றும் நாள் என்று வரும்? என்று அவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது
 
இந்த நிலையில் ஆந்திரா சட்டமன்ற தேர்தலின்போது இதே வாக்குறுதியை கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது பதவிக்கு வந்தவுடன் முதல் முயற்சியாக ரேசன் பொருட்களை வீடுதேடி கொடுக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
 
வரும் செப்டம்பர் 1 தேதி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த பணியை கிராம தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ரேசனில் வழங்கப்படும் அரிசி கடைகளில் விற்கப்படும் அரிசி போன்றே தரமானதாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த திட்டத்தை செயல்படுத்த அந்தந்த கிராமங்கள், நகரங்களில் வாழும் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், ரேசன் பொருட்கள் பாக்கெட்டுக்களாக பேக் செய்யப்பட்டு வீடு தேடி வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது. ஆந்திர முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது