ஒரு எம்.பி சீட் வேணும்!.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தேமுதிக!...
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அதிமுக, திமுக கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்துவிட்டன. அதேநேரம், சில கட்சிகள் மட்டும் இன்னும் எந்த கூட்டணிலும் சேரவில்லை. அதில் ஒன்றுதான் தேமுதிக. விஜயகாந்த் இல்லாத நிலையில் தேமுதிகவுக்கு அவ்வளவு மவுசு இல்லை.. தற்போது கட்சியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வழிநடத்தி வருகிறார். மேலும் அவரின் மகன் விஜய பிரபாகரனையும் முன்னிறுத்தி வருகிறார்கள்... கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது அக்கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் கொடுக்கவில்லை. எனவே இந்த முறை எப்படியும் ராஜ்ய சீட் கொடுப்பவருடனே கூட்டணி என பிரேமலதா முடிவு செய்திருக்கிறார்.
எனவே, கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிலும் பேசி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கையை திமுக ஏற்கவில்லை எனத் தெரிகிறது. ஒருபக்கம், தமிழகத்தில் உள்ள 6 எம்.பிக்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் 2 பேர் இருக்கிறார்கள். அவர்களின் பதவி காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது..
எனவே அதில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தால் மட்டுமே உங்களுடன் கூட்டணி அமைப்போன் என பிரேமலதா அதிமுகவிடம் சொல்லி வருகிறாராம். இரண்டு எம்.பிக்களையும் அதிமுக வைத்துக் கொள்ளுமா அல்லது ஒன்றை கூட்டணி கட்சிக்கு கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.. இதனால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி..