1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (13:21 IST)

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடிக்கு..! மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு..!!

இன்று அமைச்சராக பதவி ஏற்கும் பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடியின் தண்டனையையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.  
 
இதையடுத்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. 

தமிழக அரசின் மனுவை விசாரி உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என சரமாரி கேள்வி எழுப்பியது. பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி முடிவெடுக்க இன்று வரை நீதிபதிகள் கெடு விதித்தனர்.
 
இந்நிலையில் அமைச்சராக பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். கிண்டி ராஜ்பவனில் உள்ள அரங்கில் மாலை 3.30 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்த உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.