1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:33 IST)

கடவுளை கைகாட்டி எஸ்கேப் ஆகிறார் எடப்பாடியார்! – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் கொரோனா பாதிப்புகளை மறைப்பதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்தே வருகின்றன. இந்நிலையில் முதல்வரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பிய போது “தமிழகத்தில் எப்போது கொரோனா அழியும் என்பது கடவுளுக்குதான் தெரியும்” என கூறியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ”எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை காரணம் சொல்லக்கூடாது என்று முதல்வர் சொல்லியிருப்பது அரசின் இயலாமையின் வெளிப்பாடா?” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், ”முதலில் வெளிநாட்டு பயணிகள் மீது பழி சுமத்தி, பிறகு கோயம்பேடு வியாபாரிகள் மீது பழிசுமத்தி, பிறகு மக்கள் மீது பழிசுமத்திய முதல்வர் தற்போது இறைவன் தலையில் பாரத்தை ஏற்றுகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் ”அரசாங்கம் சொல்லும்படி மக்கள் நடந்து கொள்ள தயாராய் இருக்கிறார்கள். அதேசமயம் அரசு மக்களிடம் நம்பகதன்மையை வளர்க்க வேண்டும். மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து அரசு முடிவுகளை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.