1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (09:07 IST)

இப்போதான் தண்ணீர் திறந்து விட்டாங்க.. அதுக்குள்ள உடைப்பா! – அப்செட்டான புதுக்கோட்டை மக்கள்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 8 வருடங்கள் கழித்து நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து விட்ட நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து மற்ற கிளை நதிகளுக்கு தண்ணீர் பங்கீடு செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்படும் மேற்பனைக்காடு கால்வாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லணையிலிருந்து அந்த பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உடைப்பு சரிசெய்யப்பட்டு வருகிறது, இதனால் புதுகோட்டை பகுதிக்கு தண்ணீர் திறப்பு தாமதமாகியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.