7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் காணாமல் போன ஏழு வயது சிறுமி, அண்டை வீட்டிலிருந்த பிளாஸ்டிக் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஷிகா பிரியா என்ற அந்தச் சிறுமி, திங்கட்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். மகளை காணாமல் பதற்றமடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினருடன் இணைந்து தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், அண்டை வீட்டை சேர்ந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். அந்த வீட்டை சோதனையிட்டபோது, அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் பேரலில் ராஷிகாவின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மிட்டாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அந்த நபர் கடத்தி சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Edited by Siva