வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:28 IST)

காதலியைப் புதைத்து, பின்பு எரித்த காதலன் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள் !

காதலனோடு தனியாக வீடு எடுத்து தங்கிய காதலி அவரோடு ஏற்பட்ட தகராறால் கொன்று புதைக்கப்பட்ட  சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தரசி. கல்லூரி மாணவியான இவர் தனது அக்கா வாழ்ந்துவரும் திருப்பூர் மாவட்டத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதற்கு அக்காவின் ஊரில் வசிக்கும் பரத் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முத்தரசி திடீரென மாயமாகியுள்ளார். இது தொடர்பாக முத்தரசியின் அக்கா தமிழரசி போலிஸில் புகார் கொடுக்கவே அது தொடர்பான விசாரணையைப் போலிஸ் மேற்கொண்டுள்ளது.

அப்போது பரத்திடம் முத்தரசி சம்மந்தமாக விசாரிக்கையில் அவர் மேல் சந்தேகம் அதிகமாகவே, அவரை கைது செய்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க உண்மை வெளியாகியுள்ளது. ஆவர் சொன்னதைக் கேட்ட போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘ முத்தரசியும் பரத்தும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்குள் விரைவிலேயே கருத்து வேறுபாடுகள் அதிகமாகியுள்ளன. இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு நாள் வெளியே சென்றபோது அவர்கள் இருக்கும் போது சண்டை வரவே முத்தரசியைத் தாக்கியுள்ளார் பரத். அதனால் மயங்கி கீழே விழுந்த முத்தரசியை பைக்கில் வைத்து அவரது சொந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் பரத். ஆனால்  வீட்டுக்குப் போனபின்னர் முத்தரசி இறந்துள்ளது தெரிந்தது. இதனால் அவரின் உறவினர்கள் உதவியுடன் முத்தரசியை அவர்கள் வீட்டுக்குப் பின்னால் புதைத்துள்ளனர். பின்னர் வீட்டுக்குப் பின் பிணம் இருப்பது நல்லது அல்ல, என்பதால் அதை தோண்டி எடுத்து எரித்துள்ளனர். இதையடுத்து பரத் மற்றும் அவரது உறவினர்களைப் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.