முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. அரசாணை வெளியீடு..!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடிப்படையானது முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும் தீவிரத்தையும் பறைசாற்றுகிறது. நிர்வாக ரீதியாக, இந்தப் படை ஒரு ஐ.ஜி தலைமையின் கீழ் செயல்படும். அவருக்குத் துணையாக ஒரு எஸ்.பி , இரண்டு டி.எஸ்.பி மற்றும் நான்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இக்குழுவினர் மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த சிறப்புப்படையின் முதன்மையான பணி, குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதாகும். கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ரகசியமாகவோ அல்லது நேரடியோ கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இந்த படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையிலும் இந்த "சிங்கப்பெண் படை" களமிறங்கியுள்ளது.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழகத்தில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
