வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (13:07 IST)

ஜல்லிக்கட்டு நாயகன் எப்போதாவது மாடு பிடித்திருக்கிறாரா? – ஓபிஎஸ்ஸை கலாய்த்த துரைமுருகன்!

ஜல்லிக்கட்டு நாயகன் என்றழைக்கப்படும் ஓபிஎஸ் என்றாவது மாடு பிடித்துள்ளாரா என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ”ஓ பன்னீர்செல்வத்திற்கு எதற்கு ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டம். அவர் ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தாரா?” என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ”ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் மீதான தடையை நீக்கியதால் அவருக்கு ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டம் வழங்கப்பட்டது. துரைமுருகன் மாடு பிடிக்க விரும்பினால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஏற்பாடு செய்து தருகிறேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன் ”ஓபிஎஸ் ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடு பிடித்தால் நாங்கள் அனைவரும் வந்து நேரில் பார்க்க ஆவலாய் உள்ளோம்” என கூறினார். இரு தரப்பிலும் நடந்த இந்த நகைச்சுவை பேச்சால் சிறிது நேரம் அவையில் சிரிப்பலை எழுந்தது.