வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:14 IST)

பாகிஸ்தானால் முடியாதது திமுகவால் முடியுமா?

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவையும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டது. இதனையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த ஒரு மசோதாவிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியான திமுக, இதனை கடுமையாக எதிர்ப்பதை அரசியல் விமர்சர்கள் விநோதமாக பார்க்கின்றனர்.
 
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து ஐநா மூலம் முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஐநாவே கைவிட்டுவிட்டதால் பாகிஸ்தானே இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்களும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என அவர் அறிவித்துள்ளார்.
 
காஷ்மீர் குறித்த மசோதாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் வாக்களித்த நிலையில் திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம், புதுவையை சேர்ந்த 39 எம்பிக்களை தவிர வேறு எந்த கட்சி எம்பிக்கள் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே எதிர்க்கட்சிகளின் ஒருசில எம்பிக்களை வைத்து இரண்டு நாள் ஆர்ப்பாட்டம் செய்வதால் நிறைவேற்றப்பட்ட மசோதா ரத்து செய்யப்படுமா? இதெல்லாம் சாத்தியமா? என்றே யோசிக்காமல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
காஷ்மீர் மக்களே இந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் வைத்துக்கொண்டு திமுக செயல்படுவது சரிதானா? என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது