1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cv shanmugam planning to resign his mla post

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சிவி சண்முகம்?!.. நடப்பது என்ன?..

cv shanmugam
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. அந்த கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர். தொடர் தோல்வி காரணமாக பழனிச்சாமி மீது அதிருப்தி கொண்ட எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்தனர். அதோடு அதற்கு அவர்கள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், முதலமைச்சர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர். எனவே, அதிமுக கொறடா மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வேலையில் பழனிச்சாமி இறங்கியிருக்கிறார்.

தேர்தல் தோல்வி காரணமாக பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தொடர்ந்து சொல்லியும் பழனிச்சாமி இதுவரை பொதுக்குழுவை கூட்டவில்லை
. ஒருபக்கம், அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.

மற்றவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே சென்று விட்டனர்.. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி வேலுமணி அதிமுகவில் எந்த பிளவும் இல்லை.. தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று மட்டும்தான் நாங்கள் கூறினோம்.. எடப்பாடி பழனிச்சாமிதான் எங்கள் பொதுச் செயலாளர் என கூறினார்.

அதேபோல், பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி இரு தரப்பு எம்.எல்.ஏக்களும் இன்று சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகரனை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக நியமிக்க வேண்டும் எனவும், அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிவிக்கவேண்டும் எனவும் மனு அளித்தனர்.

ஆனால், சிவி சண்முகம் இதில் கலந்து கொள்ளவில்லை. இன்று காலை எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோதும்  சிவி சண்முகம் அங்கே இல்லை. ‘திமுகவின் ஆதரவோடு பழனிச்சாமி ஆட்சியமைக்க முயன்றார். அது எங்களுக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் தவெகவை ஆதரித்தோம்’ என சிவி சண்முகம் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளிடம் கூறியிருந்தார்.

தற்போது அவருடன் நின்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பழனிச்சாமி பக்கம் சென்றுவிட்டதால் சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க சிவி சண்முகம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை.. அதிமுக ஒற்றுமையாக உள்ளது: எஸ்பி வேலுமணி விளக்கம்..!