1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (08:40 IST)

சிமெண்ட் விலை ஏறியது ஏன்? உற்பத்தியாளர்கள் விளக்கம்!

தமிழகத்தில் சிமெண்ட் விலை சமீபகாலமாக அச்சுறுத்தக் கூடிய விலையில் உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து சிமெண்ட் விலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கட்டிடம் கட்டும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சிமெண்ட் விலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி கூறியுள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘கொரோனா பரவலின் இரண்டாவது அலை காலகட்டத்தில் மற்ற அனைத்து தொழில்களையும் போல சிமென்ட் உற்பத்தி தொழிலிலும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது. சுமார் 30 முதல் 40 சதவிகித திறன் பயன்பாடு மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. அதேநேரத்தில் இதற்கு முந்தைய ஊரடங்கு காலத்திலும், தற்போதைய காலகட்டத்திலும் எங்களுடைய ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலன்களை பாதுகாத்ததோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம்.

நாங்களும் பிழைக்க வேண்டும், அதேநேரத்தில் மற்ற எல்லா இடுபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதன் காரணமாக சிமென்ட் விலை உயர்வு என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. மொத்த கட்டுமான செலவோடு ஒப்பிடுகையில், அதில் சிமென்ட் விலை என்பது சிறிய அளவிலானதுதான் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழில்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெருந்தொற்று சூழ்ந்துள்ள இந்தக் கடினமான நேரத்தில், பொதுமக்களுக்கு தகுந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைக்கச் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிக சலுகை விலையில் சிமென்ட் கிடைக்கச் செய்வதற்காக சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சிமென்ட் தொழிற்சாலைகள் முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதி அளிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.