அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு யூனிபார்ம்.. ஷேவ் செய்து நீட்டாக இருக்க வேண்டும்..
அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கான புதிய சீருடை மற்றும் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ராமநந்தி பாரம்பரியத்தின்படி, அர்ச்சகர்கள் இனி வெளிச்சமஞ்சள் நிறத்திலான பட்டு வேட்டி மற்றும் மேலாடை அணிய வேண்டும் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இறைவனுக்கு உகந்ததாகவும், வழிபாட்டில் தூய்மையையும் ஒழுக்கத்தையும் பேணும் வகையிலும் இந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ச்சகர்கள் தங்களது தோற்றத்திலும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பாரம்பரிய ராமநந்தி திலகம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும் அல்லது பஞ்சகேச பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும்; அரைகுறையாக வளர்க்கப்பட்ட முடி அல்லது தாடி இருக்கக் கூடாது.
கோயில் அறக்கட்டளையின் மதக்குழுவின் வழிகாட்டுதலின்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை, வழிபாட்டு தலத்தின் ஆன்மீக தன்மையையும் பாரம்பரியத்தையும் மேலும் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோயில் அறக்கட்டளைக்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
