1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A protest against Hindi imposition by DMK on Sep 20

இந்தி திணிப்பை எதிர்த்து 20ஆம் தேதி போராட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

திமுக
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதில் குறிப்பாக மத்டிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ஆம் தேதி மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு தீர்மானமாக குறிப்பிடப்பட்டுள்ளது., இந்த தீர்மானம் கூறுவதாவது:
 
மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி மூர்க்கத்தனமான முறையில்  இந்தித் திணிப்பில் ஈடுபட்டு - இந்தியாவை “இந்தி”மயமாக்க திட்டம் தீட்டிச் செயல்படுவது, மிகுந்த  கவலையளிக்கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணித்து - மத்திய அரசின் உள்துறை அமைச்சரே இந்தி மொழிக்கு மட்டும்  “ஆஸ்தான தூதுவராக” மாறுவது, அரசியல் சட்டம் அளித்துள்ள மொழி வாரி மாநிலங்கள் எனும் அடிப்படைக்கு ஆபத்தை  ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்று கூறி, மாநிலங்களின் மொழியுணர்வு - குறிப்பாகத் தமிழ் மொழி உணர்வை அவமதித்துள்ள   மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள், தனது கருத்தைத் திரும்பப் பெற்று, நாடு மேம்பட வழிவிட வேண்டும் என்றும்; மக்கள் அளித்திருக்கும் பெரும்பான்மையை,  நாட்டில் கிளர்ச்சிகள் மூலம் அமைதி இன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியும் களம் காணத் தயாராகிறது தி.மு.கழகம்.
 
அன்னைத் தமிழுக்கும் பிற மாநிலத்தவரின் தாய்மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டிய பொறுப்பு பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் தி.மு.கழகத்திற்கு இருக்கிறது. பா.ஜ.க அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதற்கட்டமாக தி.மு.கழகம் 20-9-2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.
 
இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
எவ்ளோ பெருசு..கேரளாவில் பிடிப்பட்ட 14 அடி நீள ராஜ நாகம் .. வைரல் போட்டோ