போட்டி போட்டு பீர் குடித்த இளைஞர்கள்!.. 19 பீர் குடித்த 2 இளைஞர்கள் மரணம்!...
தீபாவளி, பொங்கல், புது வருடம் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் என பலருக்கும் மது குடிக்கும் ஆர்வம் வந்துவிடுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என எல்லா மாநிலங்களிலுமே மது குடிக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.
இப்போதெல்லாம் மது குடிப்பதை கூட வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அதை சாதாரணமான ஒன்றாக மாற்றி விட்டார்கள். இந்நிலையில்தான் போட்டி போட்டு பீர் குடித்த இரண்டு இளைஞர்கள் இறந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சங்கராந்தி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த மணிக்குமார்(34), புஷ்பராஜ் (26) ஆகிய இருவரும் நண்பர்களுடன் போட்டிபோட்டு தலா 19 பீர்களை குடித்திருக்கிறார்கள். அதில் மயக்கமடைந்து அவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
உடற்கூறு பரிசோதனையில் அதிக மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கடுமையான நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.