ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஜெய்முகமது தீவிரவாதி.. போலீஸ் உடையணிந்து கலவரம் ஏற்படுத்தியது கண்டுபிடிப்பு..
மேற்குவங்கத்தில் ஜெய்முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹமீம் மண்டல் என்ற பயங்கரவாதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் வைத்து அம்மாநில சிறப்பு படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை குறிவைத்து திட்டமிட்டதுடன், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் போலிஸ் சீருடையில் ஊடுருவி பெரும் கலவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டதாக காவல்துறையின் சிறப்புப்படை ஐ.ஜி கௌரவ் சர்மா செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சரின் பாதுகாப்பற்ற இடங்களை கண்டறிந்து உளவு பார்க்க சொல்லி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கூட்டாளிகள் இவருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், இவனது காதலியான அர்பிதா சர்க்கார் ஜார்க்கண்டில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜாத் பட்டி கும்பலை சேர்ந்த பாகிஸ்தானியர்களின் தூண்டுதலின் பேரில், இவர்கள் இருவரும் இணைந்து மாநில அமைச்சர் உமேஷ் ராயின் மகனைக் கடத்தி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அர்பிதா சர்க்கார் அரசியல்வாதிகள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களை ஹனிபொறி வலையில் வீழ்த்தி, உளவுத் தகவல்களைப் பெற்று ஹமீமுக்கு வழங்கி வந்துள்ளார். இவர்களிடம் இருந்து பிரிட்டன் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தீவிரவாத வலையமைப்பு குறித்த தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Edited by Siva
