1.69 கோடி சாதி சான்றிதழ்கள் போலியா? ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க முதல்வர்..!
மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, முந்தைய மம்தா பானர்ஜி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சுமார் 1.69 கோடி சாதி சான்றிதழ்களை மறுஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 15 ஆண்டு கால திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில், 'துவாரே சர்க்கார்' போன்ற முகாம்கள் மூலமாக முறைகேடான மற்றும் போலியான சாதி சான்றிதழ்கள் பெருமளவில் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2011 முதல் வழங்கப்பட்ட 1 கோடி பட்டியல் சாதியினர், 21 லட்சம் பழங்குடியினர் மற்றும் 48 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்கள் அனைத்தும் சட்ட விதிகளின்படி மறுசரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்.
இதில் ஏதேனும் போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டால், 1994-ஆம் ஆண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை ரத்து செய்யப்படும். சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது நீக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களும் இதில் அடங்கும்.
ஏற்கனவே எல்லையில் வேலி அமைப்பது, வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவது போன்ற அதிரடி முடிவுகளை எடுத்த புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, தற்போது இந்த போலி சான்றிதழ் விவகாரத்திலும் சாட்டையை சுழற்றியுள்ளார். இப்பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
