1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (08:15 IST)

டீ பார்ட்டிக்கு வரமுடியாது! டின்னர் பார்ட்டி வைக்கிறேன்! – பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி அழைப்பு!

லோதி பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி அடுத்து குடியேற போகும் பாஜக எம்பிக்கு டீ பார்ட்டிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதற்கு பாஜக எம்பி பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுசெயலாளரான பிரியங்கா காந்திக்கு 1997ம் ஆண்டில் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அரசு சார்பாக டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் உள்ள அரசினர் இல்லம் தங்குவதற்காக அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு மாற்றப்பட்டதால் ஆகஸ்டு 1க்குள் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து வீட்டை காலி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி குருகிராமில் தற்காலிகமாக ஒரு வீட்டையும் தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இதுநாள் வரை தங்கியிருந்த வீடு பாஜக எம்.பி அனில் பலூன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தான் இதுநாள் வரை தங்கியிருந்த வீட்டில் புதிதாக தங்க இருக்கும் பாஜக எம்.பிக்கு தேநீர் விருந்து அளிக்க பிரியங்கா காந்தி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்பி அனில் பலூன் தான் புற்றுநோய் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பி ஓய்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரால் பிரியங்கா காந்தி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள இயலாது என கூறப்படுகிறது. அதே சமயம் தான் லோதி பங்களாவில் குடியேறியவுடன் டின்னர் பார்ட்டிக்கு பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.