1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (14:52 IST)

எப்போதும் ஜெயிக்கிறவன் வீரன் இல்ல.. போராடுபவன்தான் வீரன்! – புதிய சாதனை படைக்கும் தோனி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் தோனி புதிய சாதனை படைக்க இருக்கிறார்.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் போட்டியில் இதுவரி 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலையும் இதுவே. ஐபிஎல் தரவரிசையில் கடைசில் உள்ள இந்த இரு அணிகளும் இன்று மோதிக் கொள்கின்றன.

கடந்த 2008ல் ஐபிஎல் தொடங்கிய காலம் தொட்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கி வருபவர் தோனி. இடையே சிஎஸ்கே அணி சில ஆண்டுகள் விளையாடாமல் திரும்ப வந்தபோது மீண்டும் அதற்கு வெற்றியை ஈட்டி கொடுத்தவர். இதுவரை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக 199 முறை விளையாடியுள்ளார் தோனி. இன்றைய ஆட்டம் அவருக்கு 200வது ஆட்டம்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை தோனி படைக்க உள்ள நிலையில் அதற்கு பரிசாக சிஎஸ்கே அணி வீரர்கள் தங்கள் கேப்டனுக்கு வெற்றியை அளிக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “ஒவ்வொரு போரிலும் வெல்பவன் வீரனல்ல.. ஒவ்வொரு போரிலும் சளைக்காமல் போராடுபவனே வீரன்” என பதிவிட்டுள்ளது.