வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (09:17 IST)

கோலியின் முக்கிய சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

நேற்று நியுசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தனது இரண்டாவது டி 20 சதத்தை அடித்தார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது டி 20 போட்டிகளில் அவரின் இரண்டாவது சதமாகும். இதன் மூலம் நேற்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆண்டில் மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 7 முறை ஆட்டநாயகன் விருது பெற்று சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக 2016 ஆம் ஆண்டு 6 முறை விராட் கோலி, ஆட்டநாயகன் விருது பெற்றதே சாதனையாக இருந்தது. கோலி, 13 போட்டிகளில் 6 முறை வென்றார். சூர்யகுமார் யாதவ் 30 போட்டிகளில் 7 முறை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.