1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2024 (08:42 IST)

நாங்கள் செய்யும் இந்த தவறை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டும்- ஆட்டநாயகன் ஹர்திக் பாண்ட்யா!

நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது.       இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடவந்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. அதனால் அடித்து ஆடமுயன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் பேட்டிங் , பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் பேசும் போது “சீரான இடைவெளியில் விக்கெட்களை இழப்பதை மட்டும் நாங்கள் சரி செய்துகொள்ள வேண்டும். மற்ற அனைத்து விஷயங்களிலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம்.” எனக் கூறியுள்ளார்.