ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:01 IST)

இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர யுக்ரேன் பல்கலைக்கழகங்கள் அழைப்பு

Ukrainian universities
யுக்ரேன் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் இந்திய மாணவர்களின் வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்தச் செய்தியில், "யுக்ரேன் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள், வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதால், அபாயங்கள் இருந்தபோதிலும் ஒன்று கல்லூரி வளாகங்களுக்குத் திரும்ப வேண்டும் அல்லது தற்காலிகமாக இணையவழி வகுப்புகளில் சேர வேண்டும் அல்லது பிற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும் என்று இந்திய மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில யுக்ரேனிய பல்கலைக்கழகங்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போர் மண்டலங்களில் அமைந்துள்ளன. அவற்றின் கட்டுமானங்கள் கணிசமாகச் சேதமடைந்துள்ளன. அவர்கள் கடைசி தேர்வாக, மாணவர்களை மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றன. யுக்ரேனிய பல்கலைக்கழகங்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலுள்ள சில நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. யுக்ரேனிய பல்கலைக்கழகங்களில் இருந்து மாற்றப்படும் மாணவர்கள் அங்கு தொடர்ந்து படிப்பார்கள்.

பெரும்பாலான யுக்ரேனிய பல்கலைக்கழகங்களுக்கான அடுத்த செமஸ்டர் செப்டம்பர் 1 தொடங்கும் என்பதால், மாணவர்கள் கட்டணம் செலுத்தி முடிவெடுக்க அடுத்த வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலுள்ள தேசிய மருத்துவ கவுன்சிலுக்கும் யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் கடிதம் எழுதியதாக மாணவர்களிடம் தெரிவித்துள்ளன.

டெல்லி துணை முதல்வர் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான இந்தச் சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

மேலும், "இந்தச் சோதனையின்போது, அரசு அதிகாரிகளின் வீடுகளிலிருந்து புதிய மதுபானக் கொள்கை தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. துணை முதல்வரின் உதவியாளர் நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்கில் முதல் குற்றவாளியாக மணிஷ் சிசோடியா சேர்க்கப்பட்டுள்ளார்," என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிசோடியா இதுகுறித்துப் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "நான் நிரபராதி. மத்திய அரசின் விருப்பத்திற்கேற சிபிஐ செயல்படுகிறது. உண்மை நீதிமன்றத்தில் வெளிவரும். இந்த வழக்கைப் பொறுத்தவரை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்," என்று கூறியுள்ளார் என்கிறது அந்த செய்தி.

மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு எதிரான பாகுபாடு: உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தொகுப்பை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மாற்றுத் திறனாளிகளை ஓரங்கட்டுவது மனித உரிமை பிரச்னையாக அறிவிக்கப்பட்டதோடு அந்த வழக்கில் அவர் வெற்றியும் பெற்றதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆசிரியரை சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்தபோது, அவருடைய பணிநிலையைக் குறைத்த ராஜஸ்தான் அரசின் முடிவை எதிர்த்துப் போராடினார்.

நீதிபதி இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு, ஆசிரியர் நெட் ராம் யாதவ் அவர் பணியாற்றும் இடம் இருந்த 550 கி.மீ தொலைவிலிருந்து தனது சொந்த ஊருக்கு இடமாற்றம் கோரினார்.

மாற்றுத்திறனாளி ஊழியர்களை அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அல்லது நிறுவன ஆதரவுள்ள வசதியான இடத்தில் பணியமர்த்துவதற்கு 2000ஆம் ஆண்டில் மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

1993ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், சுற்றறிக்கையின் பலன் யாதவுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அதோடு, நெட் ராம் யாதவுக்கு அவருடைய பல ஆண்டுகால ஆசிரியர் பணியின் முழு மூப்பு மற்றும் பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம் என்கிறது தி இந்து செய்தி.