வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (20:39 IST)

மசூத் அஸ்கர் சகோதரரை கைது செய்தது பாகிஸ்தான்

மௌலானா மசூத் அஸ்கர்
 
ஜெய்ஷ்- இ - முகம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸ்கரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்காக அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிபிசி செய்தியாளர் செகந்தர் கெர்மானி பதிவிட்ட ட்வீட்:
 
பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்ட பிறகு, ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தங்கள் மண்ணில் இருந்து செயல்பட பாகிஸ்தான் இடம் தருவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
 
பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை மார்ச் 5ம் தேதி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி ஒன்றின் மீது தற்கொலை கார் குண்டு ஒன்று மோதியதில் குறைந்தது 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
 
இந்த அமைப்பு தங்கள் எல்லையில் இருந்து செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி.
 
இதையடுத்து, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று இந்தியப் போர் விமானங்கள் குண்டு வீசின.
 
பாகிஸ்தான் தரப்பில் உள்ள பாலாகோட் என்ற பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியது. ஆனால், எல்லையை மீறி வந்த இந்திய விமானங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடித்ததாகவும், போகிற போக்கில் இந்திய விமானங்கள் ஆங்காங்கே குண்டுகளை வீசிச் சென்றதாகவும் பாகிஸ்தான் கூறியது. அத்துடன் இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அது கூறியது.
 
தொடக்கத்தில் இந்தத் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் செய்திகள் வெளியானாலும், எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை தங்களால் கூற இயலாது என்று கூறியது இந்திய விமானப்படை.
 
இதற்கிடையே பதிலடியாக அடுத்த நாளே (பிப்ரவரி 27) பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தின. இந்த விமானங்களை இந்திய விமானங்கள் விரட்டிச் சென்றன. அப்போது இந்தியப் போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
 
ஆனால், தாங்கள் ஒரு விமானத்தையே இழந்ததாகவும், பாகிஸ்தானின் F16 ரகப் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது. இந்த மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து எஜக்ட் சாதனத்தின் உதவியோடு தம்மை விடுவித்துக்கொண்ட இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் தரையில் வீழ்ந்தார். பாகிஸ்தான் அவரை உடனடியாக தம் பிடியில் எடுத்தது.
 
இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் அடுத்தடுத்த நாள்களில் எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்தி புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்தியத் தரப்பின் விளக்கங்களை அளித்த, (இடமிருந்து) இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சுரீந்தர் சிங் மஹால், கடற்படை ரியர் அட்மிரல் தல்பீர் சிங் குஜ்ரால், விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர்.
ஆனால், அமைதியை விரும்புவதன் அடையாளமாக அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து அபிநந்தன் மறுநாளே அட்டாரி - வாகா எல்லை வாயில் வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
 
ஆனால், பாகிஸ்தானின் இந்த செயலை அமைதியை விரும்புவதற்கான அதன் அடையாளமாக இந்தியா ஏற்கவில்லை. போர்க் கைதிகளை நடத்தவேண்டிய விதம் தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தின் ஷரத்துப்படியே பாகிஸ்தான் நடந்துகொண்டது என்று இந்தியா கூறியது.