12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...
கனடாவை சேர்ந்த 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் இவர், 'வோக்ஸா' என்ற நிறுவனத்தின் மூலம் கனடா, இந்தியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
தனது ஒன்பதாவது வயதில் பைதான் நிரலாக்க மொழியை கற்றுக் கொண்ட மனா, 11 வயதிலேயே சொந்தமாக AI தயாரிப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டார். தனது தந்தை பணிபுரியும் இடத்தில் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் தவறவிடப்படுவதை கவனித்த மனா, அந்த சிக்கலுக்குத் தீர்வாக 24 மணி நேரமும் செயல்படும் AI குரல் உதவியாளரை உருவாக்கினார். இந்த சாதனம் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று, உணவகங்களில் ஆர்டர்களை பெறுதல் மற்றும் முன்பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்கிறது.
தொழில்நுட்ப உதவியாளர்களை பயன்படுத்தினாலும், குறியீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தானே சோதனை செய்து பிழைகளை திருத்தியதாகக் கூறும் மனா, தற்போது 'வோக்ஸா ஏஜென்ட்ஸ்' என்ற புதிய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
பள்ளிப்படிப்பு, கால்பந்து விளையாட்டுகள் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என சாதாரண சிறுமியாக இருக்கும் அதே வேளையில், உலகளாவிய வணிகங்களுக்கு தீர்வுகளை வழங்கும் இளம் தொழில்முனைவோராக அவர் திகழ்கிறார்.
Edited by Siva
