வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:33 IST)

மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?

நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
 
அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறு ஒயர்களை கொண்ட சிப் போன்ற ஒயர்லெஸ் (கம்பியில்லாமல் தகவலை கடத்தும்) கருவியை பொருத்தியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையவழியே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
 
"நியூராலிங்க் நிறுவனத்திடம், தலையோட்டில் (Skull) சிறு ஒயர்களுடன் கூடிய கம்பியில்லா கருவி பொருத்தப்பட்ட குரங்கொன்று உள்ளது" என்று கூறியுள்ளார். அதாவது, மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இந்த குரங்கின் வாயிலாக பரிசோதித்து வருகின்றனர்.
 
"உங்களால் அந்த சிப் எங்கு பதியப்பட்டுள்ளது என்பதை காண முடியாது. அது மிகவும் மகிழ்ச்சியான குரங்கு" என்று கூறிய மஸ்க், இந்த திட்டம் குறித்த மேலதிக அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
 
"இந்த சிப் பொருத்தப்படுவதன் மூலம், குரங்குகள் ஒன்றுக்கொன்று மன விளையாட்டு விளையாடுவது சாத்தியமா? என்பது உள்ளிட்ட விடயங்களை நாங்கள் அறிய விரும்புகிறோம். அது மிகவும் அருமையாக இருக்கும் அல்லவா?" என்று அவர் மேலும் கூறினார்.
 
இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?
 
இதுபோன்ற விநோதமான திட்டத்தை ஈலோன் மஸ்க் மேற்கொள்வது இது முதல் முறையல்ல.
 
முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை ஈலோன் மஸ்க் அறிமுகப்படுத்தி இருந்தார்.
 
அந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'.
 
"இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது" என்று இணையம் வழியே நடந்த அந்த அறிமுக நிகழ்ச்சியில் ஈலோன் மஸ்க் கூறி இருந்தார்.
 
மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இதுபோன்ற இடைமுகம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார்.
 
அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் மறதி நோய், பார்கின்சன் நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
 
ஆனால் இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கமே, "மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவாற்றல் யுகம்" என்று கூறும் எலான் மஸ்க், அத்தகைய ஒரு யுகத்தில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும் என்றும் அப்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
இந்த நீண்டகால திட்டத்தின், முதல் பகுதியாக கடந்த ஆண்டு, இந்த தொழில்நுட்பத்தை பன்றிகளிடத்தில் பரிசோதிப்பது குறித்த அறிமுக கூட்டத்தை கடந்த ஆண்டு இணையம் வழியே நடத்தி இருந்தார் மஸ்க்.
 
அதில், மூளையில் 'கம்ப்யூட்டர் சிப்' பொருத்தப்பட்ட பன்றியான கெர்ட்ரூட்டின் நரம்பியல் செயல்பாடுகள் கணினி வாயிலாக கண்காணிக்கப்பட்டன.
 
அந்த பன்றி தனக்கு முன்பாக இருக்கும் உணவை பார்க்கும்போது அதன் உடலில் ஏற்படும் நரம்பியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அதன் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் அனுப்பும் ஒயர்லஸ் சிக்னல்கள் வாயிலாக பெறப்பட்டன.
 
சுமார் ஓராண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நியூராலிங்க் கருவியின் முதல் பதிப்பு தற்போது எளிமையாக்கப்பட்டு, சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாக மஸ்க் அந்த நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.
 
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உருவாக்கும் சாதனம் ஒரு மனித தலைமுடியை விட மெல்லிய நெகிழ்வான நூல்களுடன் இணைக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் (Electrodes) கொண்டுள்ளது. இது 1,000 மூளை நரம்பணுக்களின் (Neurons) செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்.