பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை.. ஒட்டுமொத்த சிஸ்டமும் அவரை காப்பாற்றிவிட்டது.. வினேஷ் போகத் அதிருப்தி..
பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்திய மல்யூத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மல்யூத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
டெல்லி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், ஒட்டுமொத்த அமைப்பும் அவரை பாதுகாக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டின் முன்னணி மல்யூத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் செல்வாக்கு மற்றும் பலத்தை பயன்படுத்தி பல பெண்களை புகார்களை வாபஸ் பெற செய்ய பிரிஜ் பூஷன் மிரட்டியதாக வினேஷ் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய தங்களது சட்டக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பிரிஜ் பூஷன், தொடக்கத்திலிருந்தே தான் நிரபராதி என்று கூறி வந்ததாகவும், இன்றைய தீர்ப்பு தமக்கும் ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இந்த பரபரப்பான விவகாரம் தற்போது மேல் நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பது இந்திய விளையாட்டு அரங்கில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
Edited by Siva
