1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:05 IST)

பிக் பாஸ் கமல்ஹாசன் சொன்ன 'தகவல் பிழை' - சமூக ஊடகங்களில் வைரல்

'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' எனும் தகவல் பிழையொன்றினை (ஞாயிறு) விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டார்.

'பிக் பாஸ்' சீசன் - 6 தொடரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் விடுதலை குறித்து பாரதி எழுதிய மற்றும் ஆசைப்பட்ட விடயங்களை மேற்கோள்காட்டும்போது உலகின் முதல் பெண் பிரதமர் ஒரு இந்தியர் என்றவாறு பேசினார்.

"பெண்ணுக்கு விடுதலை கிடைத்தால்தான், மண்ணுக்கு விடுதலை கிடைக்கும்," என்று சொன்ன கமல், "வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் 'சக்கரவர்த்தினி' என்ற ஒரு பத்திரிகையை தொடங்கி அதில் பெண்களையும் எழுத வைத்தார் பாரதி" என்று கமல் கூறினார். இந்த பேச்சின் ஓரிடத்தில் தான் அவர் "உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்பதை இந்தியாதான் செய்தது” என்றும் குறிப்பிட்டார்.

தவறான தகவலால் சர்ச்சை
கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் இந்த விவகாரம் மற்றும் கமல் பேசும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் விஜய் டிவியில் கமல் பேசிய காணொளியை பகிர்ந்து அவர் செய்த பிழை என்ன என்பது குறிப்பிட்டு விவாதிக்கத் தொடங்கினர்.

இந்தியாவை கடந்து இலங்கையிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி காணொளி வைரலானது. காரணம், உலகிலேயே முதல் பெண் பிரதமரை கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும்.

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரான சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம், 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

சிறிமாவோ பண்டார நாயக்க - இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவி. சிறிமாவின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

பிரதமர் பண்டாரநாயக்க 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, தல்துவே சோமராம எனும் பௌத்த பிக்குவினால் சுடப்பட்டு, அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக மறுநாள் உயிரிழந்தார். அவரை கொன்ற நபருக்கு பின்னாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.