செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (11:25 IST)

30 நாடுகளை அச்சுறுத்தும் லாம்ப்டா வைரஸ்; தீவிரமாக கண்காணிக்கும் பட்டியலில் இணைப்பு!

பெருவில் உருவாகி 30 நாடுகளுக்கு பரவியுள்ள வீரியமிக்க லாம்ப்டா கொரோனா வைரஸ் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய வைரஸ் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பெருவில் க்ண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேரியண்ட் கடந்த ஆகஸ்டில் பெருவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 30 நாடுகளுக்கு  மேல் இது பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. லாம்ப்டா வைரஸ் வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்பதால் மூன்றாவது அலை பரவலுக்கு லாம்ப்டா காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் லாம்ப்டா வைரஸ் வேரியண்டை தீவிரமாக கண்காணிக்கும் வைரஸ் பட்டியலில் இணைத்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவலின் தன்மை, பரவும் விதம் குறித்து முக்கியத்துவம் அளித்து ஆய்வுகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.