3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் அதைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகிறார்கள்.
இதற்கிடையில், ஷார்ஜா நகரில் உள்ள ஒரு மசூதி அருகே ஒருவர் பிச்சை எடுத்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, அவர் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதும், வெறும் மூன்று நாள்களில் பிச்சை எடுத்து ரூ.3.26 லட்சம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் காலத்தில் பிச்சை எடுப்பது ஒரு குற்றமாக கருதப்படுகிறது. சிலர் இதை ஒரு பகுதி நேர தொழிலாகவே செய்து வருகின்றனர். துபாயில் மட்டும் ரமலான் மாதத் தொடக்கத்தில் 127 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.11.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva